வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய மெய்ஞ்ஞானிகள் வெகு சிலரே ஆவர். அத்தகைய ஞானியரில் என் மனம் வியந்த சான்றோரைப் பற்றிப் பின்வரும் பாடல்களில் காணலாம்.
ஞானிகள் புகழ் பாடுவோம்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்,
“சேருமொளி ஆவாய்நீ உனக்கே” என்று
தெளிவித்த புத்தனின்சொற் பொருளை ஆய்ந்தேன்,
பார்பிணைக்கும் தளையகன்று சிறுமை சாயப்
பரிவுடன்’ஜே கே’மொழிந்த உரைகேட் டேனே!
ஞானங்கொள் வாயென்றார் ரமண யோகி,
தேனூறும் கவிதையில்வாழ் நெறியைச் சொல்லிச்
சிந்திக்கச் செய்தார்நம் கலீல் ஜிப்ரான்,
தானாகக் கண்சொரிய மனம் உருக்கும்
கீதாஞ்ச லிதந்தார் தாகூர் எம்மான்,
வானோடு மண்ணாளும் அன்பைச் சொல்லும்
மாமனிதர் இவர்களென்றன் நெஞ்சாள் வாரே!
வேதாந்தம் முழங்கிய விவேகானந்தரையும், ‘நீயே உனக்கு ஒளியாவாய்’ என்று ஞானம் சொன்ன புத்தரையும், ‘நான்யார்’ என்ற ஆத்ம விசாரணையைப் போதித்த ஶ்ரீரமணரையும், அருள்பெருஞ்சோதியாய் ஒளிதந்த வள்ளாலாரையும், ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற நாவுக்கரசரையும், ‘உள்ளம் கவர் கள்வர்’ ஞான சம்பந்தரையும் பின்வரும் பாடல்களில் போற்றித் துதிப்போம். ஞானிகள் காட்டும் நன்னெறிகளைக் கடைப்பிடிப்போம்.
விவேகானந்தர்
நம் பாரத தேசத்தில் தலைசிறந்த ஞானிகள் பலர் தோன்றி ஆன்ம ஒளி பரப்பிச் சிறப்பித்துள்ளார்கள். அவர்களில் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர்.
“சொல்லுரம் பெற்ற செல்வன், சோர்விலாத் தூய வீரன்” என்று அனுமனைக் குறித்துக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியது விவேகானந்தருக்கும் பொருந்தும்.
வீரம், விவேகம், பற்றற்றத் தூய்மை, தன்னலமற்ற அன்பு போன்ற நற்பண்புகளின் இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் விவேகானந்தரைப் போற்றும் வெண்பாக்கள் இங்கே.
காரிருளைப் போக்கும் கதிரவன்போல் – பாரிருளை
வேரறுக்க வந்தான் விவேகா னந்தனெனும்
பாரதத்தாய் பெற்ற பரன்.
பார்வையில் போர்வலிமை பாய்ச்சிடுமே – நேரில்
நவமாய்ச் சுடர்தந்து ஞானவொளி வீசும்
விவேகா னந்தன் விழி.
மோதும் நரிக்கூட்டம் ஓடிவிடும் – தீதில்
இலக்கை அடைய விழித்தெழுங்கள் என்றான்
கலைக்கடலே போன்றக் கவி.
அகமிருக்க நற்செயலை ஆற்றாய் – திகழ்ந்தொளிரும்
தோள்வலிமை காட்டித் துயரழிப்பாய் என்றான்நெஞ்(சு)
ஆளும்விவே கானந்தன் தான்.
ஶ்ரீ ரமண மகரிஷி
நமது உண்மை சொரூபம் என்பது நினைவுகளற்றிருக்கும் நன்னிலை. அதனைத் தெளிய ஆன்ம விசாரம் ஒன்றே வழி; ‘நான் யார்’ என்று தன்னை வினவிப் பார்த்தால் விவேகம் பிறக்கும் என்றார் ஶ்ரீ ரமண மகரிஷி.
மகரிஷி மொழிந்தருளிய மறையுரையானது, மனத்தின் அஞ்ஞானம் என்னும் பிணியைப் போக்கும் அருமருந்து; எண்ணங்களின் பிடியிலிருந்து இந்தக் கணமே ஆத்ம விடுதலை பெற எழிச்சியூட்டி இதமளிக்கும் இன்மொழி; வேதாந்தத்தின் சாரத்தை விளக்கி வழிகாட்டும் விளக்கொளி.
இருள்கெட உலகில் எழுந்திடும் இரவி,
அருணை என்னும் அருட்சுடர் மலையில்
அருந்தவம் புரிந்த ஆன்ம விளக்கு,
தன்னை அறிந்து தன்னலம் துறந்து
தனிப்பெரும் ஞானம் தழைத்திடும் முனிவர்,
அருமறை போன்ற அருளுரை செய்தே
இரமணர் இனிதாய் இங்ஙனம் மொழிவார்:
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்,
இறவா நன்னிலை இன்றே அமைய
ஆத்ம சொரூபத்தின் அறிவை அளிக்கும்,
எல்லாச் சீவனிலும் இருக்கும் சிவனை
எல்லை இல்லாமல் இலங்கிடும் உண்மையை
இதுவும் அன்றே இதுவும் அன்றென
வேதாந்த சொற்படி பொய்ம்மை விலக்கித்
தீதறப் பார்த்தால் பிறந்திடும் தெளிவே!