தமிழன்னை புகழ் மாலை

இனிக்கும் தமிழ்
தமிழன்னை புகழ் மாலை 2

தமிழன்னை கவிதைகள்

தமிழன்னை குறவஞ்சி

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் மொழி இனிய மொழி மட்டுமன்று; சித்தர்கள் பாடிய ஞானமொழி; பாரதியும் பாரதிதாசனும் பரவிய புதுமை மொழி; அறிவியல் வளர்க்கும் அருமொழி. அத்தகைய நற்றமிழ் சிறப்பை இந்தப் பாடல்களில் காணலாம்.

இந்தப் பாடல்கள் ‘குற்றாலக் குறவஞ்சி‘ என்னும் நூலில் ‘கொல்லிமலை எனக்குஇளைய செல்லிமலை அம்மே‘ என்று வரும் பாட்டின் மெட்டில் அமைக்கப்பட்டவை.

 திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
   சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
 இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
   இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
 
 புவிமகிழக் கவிபடைத்த கம்பன்மொழி அம்மே
   புகழேந்தி நளன்கதையைச் சொன்னமொழி அம்மே
 சுவையுடன்தெள் ளறிவுதரும் சித்தர்மொழி அம்மே
   தோன்றுமத உண்மையெல்லாம் செப்புமொழி அம்மே
 
 பாரதியின் பாட்டுயர்வால் பொலிந்தமொழி அம்மே
   பாவேந்தர் புத்துலகைப் படைத்தமொழி அம்மே
 பாருயர நீதிசொலும் புதுமைமொழி அம்மே
   பழமைவளம் மாறாமல் செழிக்குமொழி அம்மே
 
 பூத்திடும்நுண் கலைகள்பல பொங்குமொழி அம்மே
   புலமையுடன் அறிவியலில் சிறக்குமொழி அம்மே
 வாழ்த்துமன்பு நெஞ்சங்களை ஆளுமொழி அம்மே
   வையம்புகழ் செம்மொழிதான் எங்கள்தமிழ் அம்மே 

தமிழன்னை கும்மி

தமிழன்னை கும்மி – இந்தக் கவிதைகள் ‘கும்மிப் பாட்டு‘ என்னும் பாட்டு வகையில் எழுதப் பட்டவை. பாரதியின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்னும் பாட்டின் மெட்டில் அமைந்த சிந்துக் கண்ணிகள்.

 ஆதியில் நின்ற அருமொழியாம் - அணி
   ஆயிரம் கொண்ட தனிமொழியாம்
 ஓதிடும் செம்மொழி யாவினுமே - புகழ்
   ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!
 
 அறிவு சிறந்திட நெறியருளும்  - அன்பு
   ஆர்ந்த வழிசொலும் நூல்கள்தரும்
 செறிவு மிகுந்த பொருளுணர்த்தும் -  பல
   தீங்கவி யாக்கித் தெளிவளிக்கும்.
 
 சோர்வுறும் போது துணிவுதரும் - துயர்
   சூழ்ந்திடும் போது துணையிருக்கும்
 ஆர்வம் உடையவர்க் காற்றல்தந்தே - அவர்க்கு
   அருங்கவி பாடும் வலிமைதரும்
 
 விருத்தம் எனும்சுவை விருந்தளித்தே - உயர்
   வெண்பா எனும்நறும் தேன்பொழிந்து
 பொருந்தும் கலியினில் பண்ணமைத்தே - புகழ்
   புரிந்து மிளிர்பவள் தமிழன்னை!
 
 சிந்து கவிதையில் களிநடனம் - ஆடிச்
   சிந்தை களிப்புறச் செய்திடுவாள்
 சந்தம் மிகுந்திடும் பள்ளுச்சொல்லித் - தனித்
   தாளத் திசைமழை பெய்திடுவாள்!
 
 கன்னல் கரும்பின் சுவையதனை - வெல்லும்
   காதல் சுவையுடை காவியங்கள்
 அன்னை எமக்களித் தேற்றமுற்றாள் - நெஞ்சை
   ஆளும் தமிழமு தூற்றிவிட்டாள்! 

Leave a Reply