பொங்கல் கவிதை

pongal kavithai in tamil

பொங்கல் வாழ்த்துக்கள்

Pongal poem

மங்கல நாள் இதுவே! – பொங்கல் பாட்டு

பல்லவி

மங்கல நாளிதுவே! – இன்பங்கள்
    தந்திடும் நாளிதுவே!
பொங்கலோ பொங்கலென்றே – நெஞ்சங்கள்
    பொங்கிடும் நாளிதுவே!

சரணங்கள்

வானம் மகிழ்ந்து வளமளித்து வாழ்த்திடும்நாள்
ஊனை வருத்தி உழைப்போர் உயர்ந்திடும்நாள் (மங்கல)

எண்ணும் நினைவெல்லாம் இன்பம் நிறைந்திடும்நாள்
கண்ணுக் கினிக்கும் கவினழகுத் தங்கிடும்நாள் (மங்கல)

பிணிகள் தொலைந்துப் பெருநலங்கள் வாய்த்திடும்நாள்
மணிகள் ஒலிமுழங்க உள்ளம் மகிழ்வுறும்நாள் (மங்கல)

செம்பொன் ஒளியைத் திசைநிரப்பும் செங்கதிரைக்
கும்பிட் டெழுந்துக் குலம்விளங்க வேண்டிடும்நாள் (மங்கல)

தைவரும் பொங்கல் நன்னாள் – சிந்துக் கவிதை

தைவரும் பொங்கல்நன்னாள் – இந்தத்
    தரணியில் வளம்பல தந்திடும் நாள்!

செய்தொழில் சிறக்கவரும் – ஒளிச்
    செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!


பொய்வளர் பழமையெல்லாம் – தீயில்
    புகையுறப் போக்கிடும் புதுமையின் நாள்!

வையகம் வாழ்வதற்கே – எங்கும்
      மணிக்கதிர் விளைப்பவர் உயர்ந்திடும் நாள்
!
விடியலில் துயிலெழுவோம் – நலம்
       வேண்டி,நீ ராடி,புத் தாடைகொள்வோம்,

முடிவிலா வளம்செழிக்க – வீடு
        முழுவதும் தோரணம் நாட்டி வைப்போம்


முற்றத்தில் கோலமிட்டே – அணி
        முத்தொளிர் பானையில் அரிசி வைப்போம்
சுற்றமும் குடும்பமுமாய் – நின்று
       சூரியத் தேவனைக் கும்பிடுவோம்!
பொங்கலோ பொங்கலென்றே – இன்பம்
       பொங்கிடக் குரலெடுத் திசை முழங்க,

மங்கல மணிகள்கொண்டே – வண்டி
        மாடுகள் அலங்கரித் தாடி வர,


சிங்கத்தின் வலிமைகொண்ட – இளந்
        தீரர்கள் ஏற்றினை வெற்றி கொள்ள,
எங்குமோர் இன்பவெள்ளம் – நெஞ்சில் 
       எழுந்திட வந்தது பொங்கல் அம்மா!

This Post Has 2 Comments

  1. விளாகம் கலி .மாதவன் .

    அருமை அருமை கவிஞரே

    1. இமயவரம்பன்

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

Leave a Reply