இயற்கை கவிதைகள்

பொருளடக்கம்

கடற்கரைப் பாட்டு

iyarkai kavithai

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்
     காற்று தரும்சுகம் நாடிடுவோம்
படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி
     பறந்திட உடல்வளம் கூடிடுவோம்.

வானகம் கடல்தொடும் தனியழகும் – கடல்
     வாழ்ந்திடும் மீன்களின் களிப்பழகும்
மீனவர் படகிடும் துடுப்பழகும் – நிறை
     வேடிக்கைக் காட்டும் கடற்கரையே.

முதியவர் இளையவர் சிறுவர்களும் – அவர்
     உடன்வரும் துணையுடன் வலம்வருவார்
புதுமணல் வடிவுற வீடமைத்தே – இன்பம்
     பொங்கிட மழலையர் ஆர்ப்பரிப்பார்.

தோண்டி மணற்கிண றமைத்திடுவார் – சிலர்
     சோர்வறப் பந்துகள் வீசிக்கொள்வார்
தாண்டிடும் அலைகளின் தலைமேலே – நின்று
     தாண்டவம் ஆடிட சிலர்முனைவார்.

கரைதனில் ஏறிடக் கைநீட்டும் – அலை
     காளையின் வேகத்தில் பாய்ந்துவரும்
நுரையெனும் படமெடுத் தாடிவந்தே – அலை
     நொடியினில் பாம்பெனச் சீறிவிடும்

நீந்திடும் குழந்தைபோல் தவழ்ந்துவந்தே – அலை
     நெருங்கிட அடிமணல் கிளர்ந்திழுக்கும்
ஊர்ந்து நகர்ந்திங்கு வருவதுபோல் – அலை
     மோதி இடித்து வியப்பளிக்கும்

உருளலை ஒலிசெய்ய உவகைதரும் – நம்
     உணர்வினில் உயர்வுறும் உரமளிக்கும்
இரவியின் ஒளியினில் மணல்மினுக்கும் – எழில்
     இடமெனத் திகழ்வது கடற்கரையே!
English overview : This is a poem about seashore, its feet swaddling sands, beautiful horizon, fishing boats that paddle fast, families that get together, children playing with sand castles, waves dashing on the shore.

பொருளடக்கம்

மேகப் பாட்டு

இயற்கை கவிதைகள்

கருமேகம் காட்டும் உருவங்கள்

கரிய மேகம் பெரிய வானில்
    கவலை இன்றி திரியுது
        காற்றும் நீரும் குடித்து விட்டுக்
            கனத்துப் பெருத்து மிதக்குது!

உருவம் மாறி நிறம் வெளுக்கும்
    திறமை உடைய மேகத்தை
        உற்றுப் பார்த்த சிறுவர் கூட்டம்
            உரைக்கும் கற்பனை கேட்டீரோ?

ஒருவன் யானை உருவம் என்றான்
    ஓடம் என்றான் மற்றொருவன்
        உயர்ந்து பறக்கும் பறவை என்றே
            உவந்து சிறுமி உரைக்கின்றாள்!

கரடியின் உருவம் கண்டான் ஒருவன்
    கருத்துக் கிடக்கும் மேகத்தில்
        கருத்தாய் நாட்டை விரும்பும் ஒருவன்
            கண்டான் இந்திய வரைபடமே!

English overview : This is a poem about black clouds, their changing shapes and how every child sees a black cloud differently based on his/her imagination.

பொருளடக்கம்

தேனீப் பாட்டு

சின்னச் சின்னத் தேனீக்கள்
இயற்கை கவிதைகள் 6
சின்னச் சின்னத் தேனீக்கள்

சின்னச் சின்னத் தேனீக்கள்
     சிரித்துப் பறக்கும் தேனீக்கள்
மின்னும் அழகு மலர்தேடி
     மிகுந்த தேனைச் சேகரிக்கும்
தின்ன உணவு பெற்றிங்குச்
     செழித்து வையம் வாழ்ந்திடவே
பொன்மக ரந்தம் சேர்த்திடுமே
     பூமியில் பஞ்சம் தீர்த்திடுமே!

ஊரைச் சுற்றும் சிறுதேனீ
     ஓயாது இயங்கும் சிறுதேனீ
யாரும் அடையா உயரத்தில்
     இனிதாய்க் கூட்டை அமைத்திடுமே
ஆரா அமுதக் களிநடனம்
     ஆடிப் பாடிப் பேசிடுமே
பாரில் இதுபோல் அற்புதத்தைப்
      பார்த்தவர் யாரும் இங்குண்டோ?

பொருளடக்கம்

மயில் பாட்டு

மயில் பாட்டு
வண்ண வண்ண மயிலம்மா

வண்ணம் கொண்ட கண்மணிகள்
     வடிவில் பதித்த பொற்சிலைதான்
கண்கள் வியக்க உயிர்பெற்றே
     கவின்சேர் தோகை மயிலாச்சோ

கொத்தாய் மலர்கள் குவிந்தோங்கும்
     கொண்டை அசைக்கும் மயிலம்மா
முத்துத் தோகை விரித்தாடி
     உயர்வாய் நடனம் புரிந்தாயே

சோலை வண்டு பண்ணமைக்கச்
     சுவையாய்க் குயில்கள் பாட்டிசைக்க
நீல வண்ணப் பட்டுடுத்தி
     நெஞ்சம் இனிக்க ஆடுகின்றாய்!

வானில் மிதக்கும் கருமுகிலின்
     வனப்பில் மயங்கி மகிழ்வுடனே
கானில் நின்று நீயாடும்
     காட்சி கண்டு வியந்தேனே!

பொருளடக்கம்

கப்பல் பாட்டு

கவின்மிகு கப்பல்
இயற்கை கவிதைகள் 7
கண்ணைக் கவரும் கவின்மிகு கப்பல்

கண்ணைக் கவரும் கவின்மிகு கப்பல்
     கடலினில் தெரியுதுபார்! – நீல
வண்ண உடையில் கடல்மகள் சூடும்
     மணியென ஒளிருதுபார்!

கடல்நீர் பிளந்தே அலைகளைக் கிழித்துக்
     களிப்புடன் நடக்கிறதே – கப்பல்
தடைகளை நகர்த்திச் செயல்படும் வீரத்
     தமிழ்மகன் போன்றுளதே!

இரவும் பகலும் வீசிடும் காற்றால்
     இயங்கிடும் இக்கப்பல் – இது
கரையைத் தொடும்வரை எங்கும் நிற்காமல்
     கடலினில் விரைந்தோடும்.

அலைகள் மோதும் உயர்ந்த கரையில்
     அமைந்த துறைமுகத்தைக் – காட்ட
நிலையாய் நிற்கும் கலங்கரை விளக்கம்
     நிறைந்த மணல்மீதே.

விண்தான் சரிந்து கீழே விழாமல்
     தாங்கும் தூண்போலே – நின்று
கண்தான் துறைமுகம் காணாமல் ஏங்கும்
     கப்பலைக் காத்திடுமே.

எரியும் விளக்கைத் தலைமேல் தாங்கி
     எழிலொளி பாய்ச்சிடுமே – வானில்
நெருப்பாய் ஒளிரும் கலங்கரை விளக்கால்
     கடல்நீர் ஜொலித்திடுமே.

கலங்கரை விளக்கம் ஒளியினை வீசிக்
     கப்பலைக் கூப்பிடுமே – கப்பல்
நலந்தரும் தாயினைக் கண்டிடும் சேய்போல்
     நாடிக் கரைதொடுமே!

பொருளடக்கம்

இயற்கை நலம் காப்போம்

மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்
     அடைந்திடா நலங்க ளெல்லாம்
வரங்களாய் உலகுக் கீந்து
     மக்களை வாழ வைக்கும்
மரங்களை யெல்லாம் வெட்டி
     மனிதர்தாம் அழித்து வந்தால்
குரங்கின்கை மாலை போலக்
     குவலயம் ஆகு மம்மா!

ஆழ்த்திடும் பஞ்சம் போக்கும்
     பசிப்பிணி அகற்றும் மற்றும்
தாழ்த்திடும் வறுமை நீக்கும்
     திருமிகு தருக்கள் சாய்த்து
வீழ்த்திடும் எண்ணம் தன்னை
     விட்டுவிட் டின்றே காத்தால்
வாழ்த்துவாள் இயற்கை அன்னை
     வளம்பல நமக்குத் தந்தே.

பொருளடக்கம்

மழைப் பாட்டு

தரை தெறிக்கும் வான்மழை

தத்தித் தத்தித் துள்ளித் தாவித்
     தரை தெறிக்கும் வான்மழையே!
வித்தை காட்டி வானம் விட்டு
     மண்ணில் வீழும் மாமழையே!

முத்துச் சிதறல் போலத் தெளித்து
     முகம் நனைக்கும் தேன்மழையே!
சுத்தம் செய்து பொருளை எல்லாம்
     சொலிக்க வைக்க வாமழையே!

சிறியோர் பெரியோர் வறியோர் உடையோர்
     தெருவில் திரிவோர் எல்லோர்க்கும்
நிறைவாய் மண்மேல் பேதம் இன்றி
     நீரை வழங்கும் பொன்மழையே!

அறிவைப் பொழியும் குறளும் சிலம்பும்
     அழகாய் வாழ்த்தும் வான்மழையே!
குறைகள் நீங்கிப் பயிர்கள் செழிக்க
     குளிர்நீர் அளிக்க வாமழையே!

பொருளடக்கம்

Leave a Reply