தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்

தேடிச் சோறு

To download this post as a PDF – Click below

பாடல் வரிகள்

தேடிச் சோறுநிதந் தின்று — பல
  சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
  வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
  கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
   வீழ்வே னென்றுநினைத் தாயோ?

          – மகாகவி பாரதியார்

English Translation

Always foraging for food,
Trivial talks that do no good,
Suffering badly at the heart,
Actions hurting others a lot,
Growing old with greying hair,
Dying a victim to death unfair,
You thought my life will end in vain,
Like those clowns whom I disdain?

Lyrics

ThEdi chOru nitham thindru – pala
   Chinnan chirukadhaigal pEsi – manam
VAdi thunbamiga uzhandru – pirar
   VAda palaseyalgal seithu – narai
KUdik kizhapparuvam eythi – kodung
   KUtruk kiraiyenappin mAyum – pala
VEdikkai manitharaip polE – NAn
   VIzhvE nendruninaith thaiyO?

விளக்கம்

உலகெலாம் ஓர் பெருங்கனவு அஃது உளே
உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை
ஓர் கனவிலும் கனவாகும்

பாரதி (சுயசரிதை)

“உலகம் முழுதும் ஒரு பெரிய கனவுத் தோற்றம். அந்தப் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவுதான் மனித வாழ்க்கை. இந்தக் கனவை நிஜமென்று எண்ணி உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் மனிதர்கள், நெருப்பைக் கனியென்று நினைத்து அதில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகள் போன்றவர்கள்.” – இந்த மெய்ஞ்ஞானப் புரிதலுடன் தொடங்குகிறது பாரதியின் சுயசரிதைப் பாடல். தான் தெளிந்துணர்ந்த இவ்வுண்மையை உலகத்திற்கு எடுத்துரைக்க முனைந்தான் பாரதி. ‘ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்று உபதேச மொழி அளித்தான். ‘நெஞ்சு பொறுக்கு திலையே’ என்று உணர்வெழப் பாடினான். ஆனால், தனது சொற்கள் சமுதாயத்தில் எந்த விதமான மாற்றத்தையும் விளைவிக்காததைக் கண்டு கொதித்தான்; மனம் வருந்தினான். இந்த வீண்படு பொய்யை விரும்பிடும் மனிதர்களின் இழிநிலையைத் தெய்வத்திடம் சொல்லி முறையிட்டான். இவ்வேடிக்கை மனிதர்களைப் போல் தன்னையும் வீழ்ந்து மடிய விடாமல், சொல்லில் சுடரும், தோளில் வலிமையும், வையத் தலைமையும் அருள வேண்டினான். இப்படிச் சிறுமை கண்டு பொங்கும் உணர்ச்சிப் பிரவாகமே, துதியாய் ஒலிபெற்று ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் ‘யோக சித்தி’ பாடலாக உருவெடுத்தது.

நல்லதோர் வீணை‘யாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை தன்னலமென்னும் திரை மூட, நரை கூட, பிணி சேரக் காலனுக்கு இரையாக முடிந்து விடக் கூடாது. இந்த அக்கறையும் அன்பும் சேர்ந்து இடித்துரைக்கும் பாங்குடன் எழுந்த ஆவேச வெளிப்பாடே ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.

பராசக்தியைப் பார்த்துப் பாரதி பாடிய இந்தப் பாடல், நமக்குள் இருக்கும் உள்மன அழுக்குகளையும் குற்றம் குறைகளையும் அப்பட்டமாகச் சுட்டிக் காட்டும் நிலைக்கண்ணாடி போலவும் திகழ்வதை யாரும் மறுக்கமுடியாது. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ வாழும் வாழ்க்கை மனிதனை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்துத் தன்னலச் சிறையில் தள்ளித் தனிமைப்படுத்தும். அதனால் மனித வாழ்வு தாவர வாழ்விலிருந்தும் விலங்கின வாழ்விலிருந்தும் மாறுபட்டுப் பயனுள்ள செயல்கள் செய்து வாழ்ந்ததற்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். பாரதியார் காட்டும் இந்த முக்கியமான வாழ்க்கைப் பண்பை நாம் உணர வேண்டுமென்றால், இதை வெறும் தோத்திரப் பாடல்தானே என்று அலட்சியமாக நோக்காமல், இப்பாடல் அறிவுறுத்தும் உன்னதமான வாழ்நெறியைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

வாழும் வாழ்வைப் பயனுள்ளதாக்காமல் வீணடிக்கும் மனிதர்களைப் பார்த்து ஏளனமும், வெறுப்பும், மனவேதனையும், ‘இவர்கள் திருந்தி வாழ மாட்டார்களா’ என்னும் ஏக்கமும் ஒருங்கே வெளிப்படும் இப்பாடலின் உட்பொருளை இப்பதிவில் நாம் சற்று விரிவாகக் காண்போம்.

Leave a Reply